ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது: டி.ஜெயக்குமார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தலைவரை கொச்சை படுத்தி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என காங்கிரஸ் கட்சிக்கு டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் சமய நல்லிணக்கத்தோடு ஒன்றுபட்டு வாழ்கின்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ்நாட்டில் முழு அமைதியை நிலை நாட்டிய பெருமை ஜெயலலிதாவையே சேரும்.

பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கும்போதும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது, கொள்கை வேறு கூட்டணி வேறு. ஒவ்வொரு கட்சியின் கொள்கையும் சித்தாந்தமும் வேறுப்பட்டுத்தான் செயல்படுகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தலைவரை கொச்சை படுத்தி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. ஜெயலலிதாவை விமர்சிக்கும் செல்வ பெருந்தகை மீது நிறைய வழக்குகள் உள்ளன. தி.மு.க மீதான விசுவாசத்தை காட்ட இப்படி விமர்சித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.