பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது: திருமாவளவன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

அண்மையில், கொரோனா நிலவரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். ஆனால், மத்திய அரசுதான் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் இன்று, திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. இலங்கை மக்களுக்கு உதவ விசிக சார்பில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்க உள்ளோம்.

நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் ஆளுநரால் இன்னும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆளுநர் தமிழக சட்டப்பேரவையில் இயற்றும் சட்ட மசோதாக்களை இவ்வாறாகக் கிடப்பில் போடுவது வேதனை அளிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் தான் விலை உயர்வுக்கு காரணம். மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் மட்டுமே இந்த அளவிற்கு விலைவாசி உயர்வது போன்ற தோற்றத்தை பிரதமர் ஏற்படுத்துகிறார். இந்த பிரசாரத்தை பாஜக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.