சீனாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

சீனாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் அங்கிருந்த 39 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்டை நாடான சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங் ஷா நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டட இடிபாடுகளில் சுமார் 23 பேர் சிக்கி உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 39 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விபத்து பற்றி தகவலறிந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கட்டடத்தில் சிக்கி உள்ள மற்றும் காயம் அடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். கட்டட விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டு உள்ளார். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், தற்போது வரை கட்டட இடிபாடுகளில் இருந்து 5 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.