கோடையிலும் ஜொலிக்க..

கொளுத்தும் கோடையை எதிர்கொண்டு, தங்களின் மேனியை ஜொலிக்கச் செய்ய கூல் டிப்ஸ்..

* காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.

* செம்பருத்திப்பூ, இலை, கறி வேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

* வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும். இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக்கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.

* கோடையில் வெயிலில் அலைவதால் உஷ்ணக் கட்டி ஏற்படும். அதைப் போக்க ஒரு கிண்ணத்தில் மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துப் போட்டு கலக்கி கட்டி மீது பூசினால் கட்டி தானாகவே மறையும்.

* நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை சாறும், வெங்காயச் சாறும் கலந்து பெருங்காயம் சேர்த்து குடித்தால் கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாது; களைப்பும் தெரியாது.

* குளித்து முடித்ததும் நன்றாக துடைத்துவிட்டு, ஏதாவது பாடி டால்கம் பவுடர் அல்லது டியோடரண்ட் ஸ்பிரே உபயோகிக்கவும். இது கோடைக் காலத்தில் நாள் முழுக்க உங்களை நறுமணத்தோடும், புத்துணர்சியுடனும் வைக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை, தர்பூசணி, நன்னாரி போன்ற சாறுகளில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் கோடையில் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

* அதிகமாக வேர்க்கும் கோடைக் காலத்தில் படை, வேர்க்குரு போன்றவை ஏற்பட்டு அரிப்பும், எரிச்சலுமாக அவதிப்படுவீர்கள். கான்டிட்டஸ்டிஸ் பவுடரை பூசிக் கொண்டால் இந்தத் தொல்லை இருக்காது.

* எண்ணெய், மசாலா, காரம் சேர்த்த உணவு வகைகளை கோடையில் தவிர்ப்பது நல்லது.

* இரவில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மென்று திங்க உடம்பு உஷ்ணம் குறையும்.

* நுங்கு சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் உடல் முழுவதும் பூசி குளித்தால் கோடையில் வறண்ட சருமம் மிருதுவாகும்.