இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது: இம்ரான் கான்

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் பாராட்டி பேசியுள்ளார்.

பாகிஸ்தான் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. நேற்று லாகூரில் நடந்த பேரணியின் போது இம்ரான் கான் பேசியதாவது:

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானங்கள் மீதான ஒட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது தான். இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.

இந்நிலையில் இம்ரான் கான் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானிற்கு இம்ரான் கானை விட ராணுவம் தான் தேவை. ராணுவம் வலிமையற்று இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் மூன்றாக சிதறியிருக்கும். ராணுவத்தை குறை கூறி என் கட்சி எப்போதும் பேசியதில்லை. ஆனால் வலிமைமிக்க ராணுவத்தில் உள்ள சில சக்திகள் தவறான வழிகளை பின்பற்றி என்னை பதவியில் இருந்து வெளியேற்றி விட்டன. ராணுவத்தில் மனிதநேயம் உள்ளோரும் இருக்கின்றனர். அதனால் ஒருவர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த ராணுவத்தை குறை கூற முடியாது. என் வாழ்நாளில், மூன்று ஆண்டுகள் பிரதமராக பணியாற்றிய காலம் தான் மிகக் கடினமானது. ஊழலை தடுத்ததால் சில அமைச்சர்கள் என்னை விட்டு வெளியேறினர். இவ்வாறு அவர் கூறினார்.