போதை பொருள் கலாச்சாரத்திற்கு மத்திய அரசு தான் காரணம்: பொன்முடி

இந்தியாவில் பெருகி வரும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு மத்திய அரசு தான் காரணம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. மத்திய அரசு இந்த போதைப் பொருள்களை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது. முத்ரா துறைமுகம், விஜயவாடா துறைமுகத்தில் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குஜராத்தில் உள்ள துறைமுகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போதைப் பொருளைத் தடுக்கும் வகையில் காவல் துறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை நடத்தி போதைப் பொருள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழக முதலமைச்சர். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. துறைமுகங்களை தனியாருக்கு கொடுக்கும் நிலையை மாற்றி அமைத்தால் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும். போதை பொருள் விற்பனையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20, 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.