டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பு வெளியான போது டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட வருமாறு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.