பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்: அபிஷேக் பானர்ஜி

பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என்று, மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது.

இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, செப்டம்பர் 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், விசாரணைக்காக என்னை 30 முறை அழைத்தாலும் நான் வருவேன். பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். பா.ஜ.க. காலில் விழமாட்டேன். தேசியக் கொடி விவகாரத்தில் அமித்ஷாவின் மகனைத் தாக்கியதால் அமலாக்கத்துறை அல்லது சிபிஐ மூலம் என்னை அச்சுறுத்த முடியாது என தெரிவித்தார்.