விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் தனியார் ‘செக்யூரிட்டி’களை நியமிக்க முடிவு!

நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக தனியார் ‘செக்யூரிட்டி’களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1999ல் ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம், ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள் பாதுகாப்பு பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம், 1.63 லட்சம் வீரர்கள் உள்ள இந்தப் படையைச் சேர்ந்த 33 ஆயிரம் பேர், நாடு முழுதும் உள்ள, 65 விமான நிலையங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலையங்கள் பாதுகாப்பு தொடர்பாக, 2018 – 2019ல் புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து இதை உருவாக்கின. பி.சி.ஏ.எஸ்., எனப்படும் சிவில் விமான பாதுகாப்பு வாரியம் மற்றும் சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், விமான நிலையங்களில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து சமீபத்தில் ஆராயப்பட்டது. இது குறித்து சி.ஐ.எஸ்.எப்., படையின் உயரதிகாரிகள் கூறியதாவது:-

விமான நிலையங்களில் சில இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் தேவையில்லை. அது போன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி மொத்தம், 3,049 இடங்களில் படை வீரர்களின் தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இடங்களில் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களைச் சேர்ந்தோரை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரிசையை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளுக்கு படை வீரர்கள் தேவையில்லை. அதுபோன்ற பணியிடங்களில், தனியார் செக்யூரிட்டிகள் பணி அமர்த்தப்படுவர். பயணியரை பரிசோதிப்பது, விமான நிலையத்தின் பாதுகாப்பு போன்றவற்றில் படை வீரர்களே ஈடுபடுத்தப்படுவர். தனியார் செக்யூரிட்டிகளும், படையின் விதிகளுக்கு உட்பட்டே, அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர். இந்த மாற்றத்தால், பாதுகாப்புக்கான செலவு குறையும். அதன் பலன் பயணியருக்கு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.