சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்: சைலேந்திர பாபு!

சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த சில காலமாகவே ஆன்லைன் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் சமீப ஆண்டுகளில் இணையவழி குற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாகத் தமிழக போலீஸ் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகள், போதைப்பொருட்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் குழு ஒன்றை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வதந்திகளாகப் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்காகச் சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்புக் குழுவினை தமிழகக் காவல்துறை சார்பில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கணினி திறன் மற்றும் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்யப்பட்டு இதில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழுவைப் பொறுத்தவரை சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும். குறிப்பாகப் பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்வதற்கும் இந்த குழு செயல்படும். சாதி, மத அரசியல் மோதல்களை முழுமையாகத் தடுத்திடவும் இந்த குழு செயல்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.