செகந்திராபாத் தீ விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர்.

செகந்திராபாத் நகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு திடீரென தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 8 பேரில் இருவர் சென்னையைச் சேர்ந்த சீதாராமன், பாலாஜி ஆவர். ஒரு பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாக ஐதராபாத் வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தெலுங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி. ஸ்ரீனிவாஸ் யாதவ் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.