கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை , அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த இரு நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 7-ந் தேதி கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுதலையான நிலையில் அடுத்த கைது அரங்கேறியிருக்கிறது.

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மீனவர்கள் அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.