உக்ரைன் பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்: ஐ.நா.

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்வதாக ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த எட்டு மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்கள் உக்ரைனை சேர்ந்த பெண்களை வயாகரா மாத்திரை உட்கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த போரில் பாலியல் வன்முறை தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். உக்ரைனில் பலாத்காரம் ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டபோது, ‘எல்லா அறிகுறிகளும் உள்ளன’ என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

படையெடுப்பு துவங்கியதில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐ.நா பதிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். தொடர் பிறப்புறுப்பு சிதைவுகளைப் பார்க்கும்போது ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கபட்ட பெண்கள் சாட்சி அளித்து உள்ளனர். இதுவும் ஒரு ராணுவ உத்தியாக உள்ளது. ரஷ்யப் படைகளால் நடத்தபட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதிப்படுத்தியது, மேலும் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வயது நான்கு முதல் 82 வயது வரை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.