அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே. மிஸ்ராவின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது.

அமலாக்கத்துறையில் ஒரு வருட சேவை நீட்டிப்பைப் பெற்ற முதல் நபராக எஸ்.கே.மிஸ்ரா ஆனார். இந்த பணி நீட்டிப்புக்கு முன், மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவர்கள் இரண்டு வருட பதவிக் காலம் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு பதவியில் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை அவகாசம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. மத்திய அரசு அரசாணை வெளியிட்ட அடுத்த நாள் ஓய்வு பெறவிருந்த மிஸ்ராவுக்கு, நவம்பர் 18, 2022 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. அல்லது மறு அறிவிப்பு வரும் வரை பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள், இது அரசாங்க ஆட்சியாளர்களின் சொல்படி கேட்கும் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கும் தந்திரம் என்று தெரிவித்தனர்.

அரசாங்கம் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவை “அதிகாரத்தை அபகரிப்பதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைப்பதற்கும் உதவியாளர்களாக” பயன்படுத்தியுள்ளது, அவர்களுக்கு இப்போது வெகுமதி அளிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.

இந்தநிலையில் அமலாக்க இயக்குனரகத்தின் தலைவர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிகாலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீட்டிப்பு மூலம், அவர் அடுத்த ஆண்டு, பதவியில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்வார்.