தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது!

கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 சதவீதம் உள்ளனர். 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 10 சதவீதம் உள்ளனர். குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர். 2021-ம் ஆண்டு சி.ஏ.சி.எல். என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இறந்ததாக ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 75 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படும்போது மத்திய, மாநில அரசு தரப்பில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் அதில் பெரும் தாமதம் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது. ஆகவே இந்த பகுதிகளில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தை அமைத்து மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து இழப்பீடு தொகை விரைந்து கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.

வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.