இத்தாலி மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு: 3 பெண்கள் பலி!

இத்தாலி மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள் பலியாகினர். இறந்த பெண்களில் நிகோலெட்டா என்பவர் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி ஆவார்.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் சங்கக் கூட்டம், அங்குள்ள விடுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியை வெளியே எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. குடியிருப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அவருக்கும் பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டில் இறந்துபோன பெண்களில் நிகோலெட்டா என்பவர் தனது தோழி என்றும், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறி உள்ளார்.