விஜய் மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம்: ஜேம்ஸ் வசந்தன்!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், வாரிசு பட விழாவில் நடிகர் விஜயின் தோற்றம் மனதைச் சற்று நெருடியதாகவும், தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடித்த ஏராளமான நட்சத்திரங்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வழக்கம் போல் கடைசியாக பேசிய நடிகர் விஜய், ரசிகர்களுக்கு சொல்லிய குட்டிக்கதையும், சில அறிவுரைகளும் வரவேற்பை பெற்றன. அதேபோல் புதிய ஸ்டைலில் தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. எப்போதும் இசை வெளியீட்டு விழாவிற்கு பிரத்யேகமாக உடையணிந்து அனைவரையும் கவனிக்க வைக்கும் நடிகர் விஜய், இந்த விழாவில் மிகவும் எளிமையாக சாதாரண உடையணிந்து கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் அவரது ஹேர் ஸ்டைலும் பெரிதாக ஈர்ப்பில்லாமல் இருந்தது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? விஜயின் தாக்கம் ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.

ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.