என் அண்ணனை அம்பானி அதானியால் விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி

என் அண்ணனை அம்பானி அதானியால் விலைக்கு வாங்க முடியவில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, கடந்த மாதம் 24ஆம் தேதி டெல்லி சென்றது. அன்று மாலை செங்கோட்டையில் பேரணி நிறைவடைந்தது. இதையடுத்து, குளிர்காலத்தையொட்டி 9 நாட்கள் நடைபயணத்துக்கு விடுப்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் டெல்லியில் இருந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது. டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டிலிருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் யாத்திரை, லோனி நகரம் சென்று காசியாபாத் வழியாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் பிற்பகலில் நுழைந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி நகரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இருவரும் கைரானா, ஷாமிலியின் பல பகுதிகளைத் தொட்டு பாக்பத் வழியாக நடைபயணம் மேற்கொண்டனர். அம்மாநிலத்தில் ராகுலின் நடைபயணத்தில் பிரியங்காவும் கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக, லோனி நகரில் பேசிய பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்தி “உண்மையின் பாதையை” பின்பற்றியதற்காக பாராட்டினார். மேலும், யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்கள் ஒற்றுமை, அன்பு, மரியாதை ஆகியவற்றின் செய்தியை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார். கோடிக்கணக்கான ரூபாய்களை பயன்படுத்தி ராகுலின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் ராகுலைத் தவிர எல்லோரையும் வாங்குகிறார்கள் என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

“என் அன்பான மூத்த சகோதரரே, உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் உங்கள் இமேஜை அழிக்க அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்தாலும் நீங்கள் பின்வாங்கவில்லை. அதானியும், அம்பானியும் பல தலைவர்களை வாங்கினார்கள், பொதுத்துறை நிறுவனங்களை வாங்கினார்கள்; ஊடகங்களை வாங்கினார்கள்; ஆனால் என் சகோதரனை அவர்களால் வாங்க முடியவில்லை. அவர்களால் ராகுல் காந்தியை வாங்க முடியாது. நான் அவரை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று பிரியங்கா காந்தி பேசினார்.