எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா. மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் திருமகன் ஈ.வெ.ரா(46). திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று அவர் காலமானார். திருமகன் ஈ.வெ.ரா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். ஈவிகேஎஸ் இளங்கோவன் – வரலட்சுமி தம்பதியின் இரண்டாவது மகன் திருமகன். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா. மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத், தந்தையார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா , 2021 ஆம் ஆண்டு தான் முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் திருமகன் ஈ.வெ.ரா. ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது.

தனது அன்பு மகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவனை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன். திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.