ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம்!

ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்து சோனு சூட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பையில் புறநகர் ரெயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோனு சூட் அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் சூனு சூட் இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்கவும், சும்மா அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரயிலின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள். இந்தச் செய்திக்கும், நாட்டின் ரெயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து நாடு முழுவதும் பிரபலமடைந்தார் என்பதும் அதிலிருந்து சோனுசூட் எதைச்செய்தாலும் அது செய்தியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.