தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தான் சுற்றுச்சுவருக்குள் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது உள் அரங்குகளிலும் அணிவகுப்பை நடத்திக்கொள்ள அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் நடந்த விசாரணையின்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய மைதானங்கள், அரங்குகளில் அணிவகுப்பை நடத்த உத்தரவிட்டது தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் ஜனவரி 22 மற்றும் 29-ம் தேதிகளில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். எனவே அந்த மனுவை பரிசீலிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஜனவரி 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29ம் தேதி அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த வேளையில் காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்திலக், சுதந்திரமான முறையில் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினர். இந்த வேளையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கவில்லை. கோவையில் திராவிட தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலதிற்கும் அனுமதி மறுக்கபட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையிடம் ஆர்எஸ்எஸ் சார்பாக மனு கொடுக்கும்பட்சத்தில் மாவட்டதில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினை உட்பட்டு மனுவை பரீசிலிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்திலக் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மனு கொடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதனால் மீண்டும் இந்த வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.