எனக்கு முன்மாதிரி கமல் சார்தான்: சூர்யா

நடிகர் சூர்யாவிடம் சினிமாவில் உங்கள் முன்மாதிரி யார் எனக் கேள்வியெழுப்பட்டது. அதற்கு சூர்யா, எனக்கு முன்மாதிரி கமல் சார்தான் என்று கூறியுள்ளார்.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதழ் ஒன்றிருக்குப் பேட்டியளித்த நடிகர் சூர்யாவிடம் சினிமாவில் உங்கள் முன்மாதிரி யார் எனக் கேள்வியெழுப்பட்டது. அதற்கு சூர்யா, “எனக்கு முன்மாதிரி கமல் சார்தான். அவர் வணிக வெற்றிப் படங்களையும் தருவார் அதேநேரம் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்வார். பெரிய தோல்விப் படத்திற்குப் பின்பும் பாதுகாப்பு இல்லாத படத்துடன்தான் வருவார். அவர் நினைத்தால் எளிதாக வெற்றி பெறலாம். ஆனால், அந்த சக்சஸ் பார்முலாக்களை பின் தொடர மாட்டார். எனக்கு வாழ்நாள் பாடம் இது. எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியைப் பெற்று ஜெயிக்க வேண்டும். அது பேசப்படும் நல்ல படமாகவும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.