தமிழ்நாட்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி கடன் எப்படி வந்துச்சு?: சீமான்!

தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததைக் கண்டித்து செவிலியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “செவிலியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லையா? தமிழ்நாட்டுக்கு ரூ.6,50,000 கோடி கடன் வந்தது எப்படி என அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2,422 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, தற்காலிக செவிலியர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-

அன்னை தெரசா விட்டுச்சென்ற பணியை அன்றாடம் செய்து கொண்டு இருப்பவர்கள் செவிலியர்கள். கொரானா நோய்த்தோற்று காலத்தில் முழு அர்ப்பணிப்போடு பணி செய்தார்கள். கொரானா நோய்த் தொற்றால் இறந்துபோன மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகம். செவிலியர்கள் எல்லாம் கொரோனா காலகட்டத்தில் தேவதைகளை போல தெரிந்தார்கள். இன்று கொரோனா முழுவதுமாக ஒழியவில்லை, குறைந்திருக்கிறது. அவ்வளவுதான். இந்தப் போராட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் கூடி போராடினார்கள். அந்தப் போராட்டத்திலும் நான் பங்கேற்றேன். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் இந்த செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார். அதைத்தான் நிறைவேற்றச் சொல்கிறார்கள்.
நிரந்தர பணி நியமனம் என்று வாக்குறுதியை கொடுத்தவர் இன்று வஞ்சகத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறார்.

மக்களுக்காக சேவை செய்பவர்கள் வீதியில் நின்று போராடுவது கொடுமை. ஆங்கில புத்தாண்டு அன்று செய்த தவறை தமிழ்ப் புத்தாண்டு அன்று சரி செய்யுங்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் பணியை உறுதி செய்யுங்கள். நாங்கள் தான் இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெருமையாக பேசுகிறீர்கள். இதை சரி செய்யுங்கள் இந்தியாவில் நம்பர் 1 நீங்கள் தான் என்று நாங்களும் சொல்கிறோம். கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள் வீதியில் வந்து போராடுகிறார்கள். ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். செவிலியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லையா? தமிழ்நாட்டுக்கு ரூ.6,50,000 கோடி கடன் வந்தது எப்படி? என அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும். இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.