சென்னையில் காவல் நிலையத்திற்கு வந்த நடிகர் பிரபு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு நடிகர் பிரபு திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலையில் அமைந்துள்ள பூக்கடை காவல் நிலையமானது 1876ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்டதாகும். கடந்த 2006ஆம் ஆண்டு இந்த காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் இப்போது முழுமையாக உட்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு முழுமையாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.மேலும், புகார் அளிக்க வருபவர்கள் நாம் வந்திருப்பது காவல் நிலையமா என ஒரு நொடி யோசிக்கும் அளவுக்கு அங்கு உட்கட்டமைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய மின் சக்தி மூலம் மின்னாற்றலை பெறும் வகையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காவல் நிலையம் என்ற எண்ணமே ஏற்படாத வகையில் ஹைஃபையாக மாற்றப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை சிறப்பாக பரமாரிப்பது, காவல் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, ஆவணங்களை முறையாக பராமரித்து வருவது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், உட்பட இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றிருப்பதால் பூக்கடை காவல் நிலையத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தான் ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு சிறப்பியல்புகளை கொண்டுள்ள காவல் நிலையத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும் என விரும்பியிருக்கிறார் நடிகர் பிரபு.

இந்நிலையில் தனது நீண்ட நாள் விருப்பத்தை நிஜமாக்கும் வகையில் சென்னை பூக்கடை காவல் நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்து அங்கிருந்து காவலர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் பிரபு. இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதை பார்த்ததும் புகார் கொடுக்கத் தான் வந்திருக்கிறாரோ என காவல்துறையினர் நினைத்திருக்கின்றனர். பின்னர் தான் அவர்களுக்கே இந்த விவரமே தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து உற்சாகமான அவர்கள் பிரபுவுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.