ஜோஷிமத் நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்கள் குறித்து ராகுல் காந்தி கவலை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் இடிந்தது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியானது, பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் மற்றும் சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக உள்ளது. இங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, ஜோஷிமத்தில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வயல்களில் பெரிய விரிசல்கள் உருவாகி படிப்படியாக மூழ்கி வருகிறது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத்தில் நிலம் சரிவு மற்றும் அதன் தாக்கம் குறித்து “விரைவான ஆய்வு” நடத்த மத்திய அரசு நேற்று ஒரு குழுவை அமைத்தது.

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் படும் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த குளிர் காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை கவனித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டார். இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத்தில் இருந்து வரும் படங்கள் திகிலூட்டும் வகையில் உள்ளன. நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வீடுகளில் விரிசல், நீர் கசிவு, நிலத்தில் விரிசல், சாலைகள் சரிந்து கிடப்பது மிகுந்த கவலையளிக்கிறது. பகவதி கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டது கவலையை தருகிறது.
இயற்கைக்கு எதிராக மலைகளில் தொடர்ச்சியான தோண்டுதல் மற்றும் திட்டமிடப்படாத கட்டுமானம் ஆகியவை இன்று ஜோஷிமத் மக்களை ஒரு பயங்கரமான நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தக் கடுமையான காலநிலையில் மக்களைக் கவனித்து, அவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு அளிக்கவும், கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரகாண்ட் அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கடும் குளிரில், இந்தப் பேரிடரில் மக்களின் வீடுகளையே பறிகொடுத்துவிட்டது. மக்களுக்கு விரைவில் உதவவும், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் அங்குள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.