தேசிய கீதத்திற்கு ஆளுநர் மரியாதை அளிக்கவில்லை: தங்கம் தென்னரசு

தேசிய கீதத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் அண்ணா, அம்பேத்கர், கலைஞர் என்ற பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்றும் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, முறையாக தேசிய கீதத்துடன் கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கையெழுத்திட்ட பிறகு தான் அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் பேரவையில் உரையை வாசிக்கும்போது நடைமுறைக்கு மாறாகவும், அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் வாசித்துள்ளார். அம்பேத்கரின் பெயரைகூட ஆளுநர் தனது உரையில் புறக்கணித்துள்ளார். அண்ணா, பெரியார் பெயர்களை உச்சாரிக்காததை அதிமுக கண்டிக்கவில்லை. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையிலிருந்து ஆளுநர் கிளம்பிச் சென்றார். மேலும், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறியது அநாகரிகமான செயல். இவ்வாறு அவர் கூறினார்.