ஆளுநர் நிபந்தனையற்ற மனிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் தமிழக ஆளுநர் அவமதித்துள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணியளவில் தனது உரையை சட்டசபையில் வாசித்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட பல வார்த்தைகள், முக்கிய பத்திகளை வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பாகவே அவருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் அவையிலிருந்து பாதியில் வெளியேறினார். தமிழ்நாடு ஆளுநரின் செயல் அவை மாண்புக்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது என்று தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:-

திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும். மேலும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஐயா ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.