வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அதிக டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.