மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து தமிழ்நாட்டு எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசியை சேர்ந்த சிதம்பரம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இங்கிருந்து கனிம வளங்களை கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், ஏன் இந்த நிலை என கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் எல்லையோர. உள்ள மாவட்டங்களில், பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.