திராவிடம் என வருவதால் தேசிய கீதத்தை ஆளுநர் பாடாமல் விட்டுவிடுவாரா?: அன்புமணி

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருவதால், அதனை தமிழக ஆளுநர் ரவி பாடாமல் விட்டுவிடுவாரா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பசுமை தாயகம் அமைப்பு சார்பில் “நொய்யல் ஆற்றை மீட்போம்” கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த பாமக தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற முதற்கட்ட முயற்சி எடுக்கிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம். அனைவரும் ஒன்று சேர வேண்டும். நொய்யல் நன்றாக இருந்தால்தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும். நொய்யல் ஆற்றில் நான்கரை லட்சம் ஏக்கர் ஒரு காலத்தில் பாசனம் செய்தார்கள். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். நொய்யலை மீட்டெடுப்பதற்கு முன் அதை தொடங்குகின்ற காடுகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்து கழிவுகளும் நேரடியாக நொய்யலுக்கு போகிறது. சாயக்கழிவுகள் கணக்கே கிடையாது.

சவுத் கொரியாவில், லண்டனில் இதுபோன்ற பாதிக்கப்பட்ட நதிகளை மீட்டெடுத்துள்ளனர். அதேபோல மீட்டெடுக்க வேண்டும். இந்த நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். வேண்டியவர்கள் என்று பார்க்க கூடாது.காலநிலை மாற்றம் பெரிய சவாலாக இருக்கும். பாரம்பரிய நீரை மீட்டெடுக்க வாருங்கள். நொய்யல் ஆற்றுக்கும், சோழர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தூர் வருவதில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் நடந்து வருகிறது.

ஆளுநரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநரும் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். வேறுவிதமான அரசியலில் ஈடுபடக் கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து தமிழ்நாடா, தமிழகமா? மத்திய அரசா, ஒன்றிய அரசா? என இருக்க கூடாது.

ஆன்லைன் விளையாட்டால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. ஏன் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. ஆளுநர் இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடா, தமிழகமா? என்பது ஆளுநரின் வேலை கிடையாது. தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது. அதற்காக அதனை ஆளுநர் பாடாமல் விட்டு விடுவாரா? சபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பு கவர்னர் வெளியேறியது மரபுக்கு மீறிய செயல்.

வந்த வெள்ளத்துக்கு இன்னும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஒரு மாதமா இரண்டு படங்கள் (வாரிசு, துணிவு) குறித்து இங்கு விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

பொங்கல் பரிசாக ஆறடி கரும்பு தான் தர வேண்டும் என்ற முடிவை அரசு மாற்ற வேண்டும். அதிக ரசாயனம் கலந்தால் தான் கரும்பு ஆறடி வரை வளரும். அது யாருக்கும் நல்லதல்ல. தமிழக முதல்வரிடம் இந்த யோசனையை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. காவேரி ரீஜினவேஷன் ஸ்கீம் மூலம் நொய்யல் ஆற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.