கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இதையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. இந்நிலையில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மிகச் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள் ராகுல் சீப்லிகஞ்ச், காலா பைரவா, பிரேம் ரக்சித், ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்று தந்திருக்கிறார் எம்.எம்.கீரவாணி. முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.