ஆளுநரின் செயலை கண்டித்து 234 தொகுதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு சட்டசபையில் மரபை மீறிய ஆளுநரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக 234 தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சியாக காங்கிரஸ் சார்பாக அரசியலமைப்பை பாதுகாப்போம் – கையோடு கை கோர்ப்போம் என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், மேலிட பார்வையாளர் கொடிக்குனில் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

‘அரசியலமைப்பை பாதுகாப்போம் – கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தை ஜனவரி 26ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் வரலாறு காணாத மரபு மீறிய, மக்கள் முகம் சுளிக்கிற காரியத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வருகிறார். தமிழ்நாடு போன்ற ஜனநாயக பூங்காவில் ரவியை போன்ற ஆளுநர் செயல்பட முடியாது. காவல்துறையின் பின்புலம் கொண்டவருக்கு ஜனநாயகத்தை பற்றி எதுவும் தெரியாது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் இருந்து தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் வெளியே சென்றுள்ளார். மத்திய அரசின் அறிக்கையை குடியரசு தலைவர் மாற்றி படித்தால் பாஜக மற்றும் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார்களா? அதிகாரத்தை வைத்து ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டை மிரட்டிப் பார்க்கிறது. ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை தமிழ்நாடு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். அதேபோல் வரும் ஜன.19ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் கூறுகையில், மக்களின் தினசரி பிரச்சினைகளை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பேசியிருக்கிறது. வன்முறை மற்றும் பிரிவினைவாதம் தற்போது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சமூக பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றினாலும் நாம் அனைவரும் ஒருவர் தான். மாநிலங்களின் அமைதி அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்பும் பிரச்சார இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களை வீடு வீடாக காங்கிரஸ் கட்சி சென்றடையும். ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு மாநிலங்களின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.