முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்!

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. இதை அவருடைய மகள் சுபாஷினி தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் யாதவ் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் என்னென்ன பிரச்சினைகள் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சூழலில் தான் நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சரத் யாதவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரத் யாதவின் மறைவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் பட்டதாரியான இவர், ராம் மனோகர் லோஹியாவின் சோஷியலிச கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 1974ல் அரசியலில் குதித்தார். அப்போது நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த சோஷியலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் புரட்சி பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது. 1977ல் மீண்டும் ஜபல்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1980களில் ஜனதா தள் கட்சி உருவாக்கப்படுவதற்கு சரத் யாதவ் முக்கிய பங்காற்றினார். அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் போது முக்கியமான நபராக இருந்தார். மேலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்தார். இதுதவிர சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை கையிலெடுத்து தீவிரமாக உழைத்தார்.

1989ல் பதுவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பிகார் மாநிலத்தின் மாதேபூரா தொகுதி பக்கம் சென்றார். இங்கு 1991, 1996, 1999, 2009 என நான்கு முறை வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார். பிகாரின் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் கைகோர்த்து செயல்பட்டார். சரத் யாதவின் அரசியல் மத்தியப் பிரதேசம், பிகார் என இரண்டு மாநிலங்களை மையப்படுத்தியே இருந்தது.

லாலு பிரசாத் யாதவ் தனிக்கட்சி தொடங்கிய போது நிதிஷ் குமார் உடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடங்கினார். பின்னர் நிதிஷ் உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் லோக்தந்திரிக் ஜனதா தள் என்ற புதிய கட்சியை 2018ல் ஆரம்பித்தார். ஆனால் பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த சூழலில் தான் ஐந்து ஆண்டுகள் கழித்து 2022ல் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இணைத்து விட்டார். வி.பி.சிங், வாஜ்பாய் ஆகியோர் ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தவர்.

பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “சரத் யாதவ் மறைவு வேதனையளிக்கிறது. நீண்ட காலமாக எம்பியாகவும், அமைச்சராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நான் எப்போதும் இவரை போற்றுவேன். சரத் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், சரத் யாதவ் மறைவுக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில், “அண்ணன் சரத் யாதவ் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் நானும் ராம் மனோகர் லோஹியா மற்றும் கர்பூரி தாக்கூரிடம் இருந்து சோசலிச அரசியலைக் கற்றுக்கொண்டோம். நானும் சரத் யாதவும் ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டோம். ஆனால் இது கருத்து மோதல் சண்டையாகதான் இருந்தது. எனவே இந்த சண்டைகள் எங்களிடையே எந்த பிளவையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.