பாஜகவை ஆதரித்தால் தலிபான் நிலை தான் ஏற்படும்: முதல்வர் சந்திரசேகர ராவ்

பாஜகவை ஆதரித்தால் தலிபான் நிலை ஏற்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முன்னனியில் இருப்பவர் தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ். பாஜகவை வங்க கடலில் தூக்கி எறிய வேண்டும் என கடுமையாக சாடியவர், பிரதமரின் மாநில வருகையின் பலமுறை கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஒரு முறை நிர்மலா சீதாராமன் தெலங்கான வந்த போது, அங்கிருந்த ரேஷன் கடையில் பிரதமரின் படம் இல்லை என மாவட்ட ஆட்சியரை கடுமையாக சாடினார். அதற்கு எதிர்வினை ஆற்றிய கேசிஆரின் தொண்டர்கள், சிலிண்டர் எரிவாயின் விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் சிலிண்டரில் பிரதமரின் படம் வைத்து காட்சிபடுத்தினர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இவ்வாறு பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் கேசிஆர், தற்போது பாஜகவை ஆதரித்தால் தலிபான்கள் நிலை இந்தியாவிற்கு வரக்கூடும் என எச்சரித்துள்ளார்.

ஆளும் பிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், மத மற்றும் சாதி வெறி மற்றும் சமூகத்தில் பிளவுகளைத் தூண்டுவது விரும்பத்தகாத சூழ்நிலைகள் ஏற்படுத்தும் எனவும் தலிபான் போன்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என்றார். மஹபூபாபாத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் பொதுக்கூட்டத்தில் கேசிஆர் மேலும் பேசியதாவது:-

சமுதாயம் பெரும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அனைவரின் நலனுக்காகவும் விரும்புவது முக்கியம். மத, ஜாதி வெறியை வளர்த்தால், மக்களைப் பிளவுபடுத்தி, பின்பற்றும் கொள்கைகள், நரகம் போல, ஆப்கானிஸ்தானைப் போல, தலிபான் விவகாரம் போல, பயங்கரமான நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த வெறுப்பின் காரணமாக, நாட்டின் உயிர்நாடியே எரிந்து விழும் சூழல் உருவாகும். எனவே, குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத்தியில் முற்போக்கு சிந்தனையும், பாரபட்சமும் இல்லாத அரசு அமைந்தால் மட்டுமே நாடும், மாநிலமும் முன்னேற்றம் அடைய முடியும். எதிர்கால அரசியலில் நாடு முழுவதும் முன்னேறும் வழியை தெலங்கானா காட்டுவதை விரும்புகிறேன்.

2014ல் தெலுங்கானா மாநிலம் உருவாகும் போது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது ரூ.11.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டிபி ரூ.14.50 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் கொள்கைகளால் ₹ 11.50 லட்சம் கோடியாக இருந்தது. மத்திய அரசின் திறமையற்ற கொள்கைகளால், தெலங்கானா மாநிலத்துக்கு மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பொருளாதார வல்லுநர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் சிஏஜி மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.