பென்னி குவிக்குக்கு பொங்கல் வைத்து நன்றிக்கடன் செலுத்திய கிராம மக்கள்!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் 182 ஆவது பிறந்த நாள் விழா விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொங்கல் வைத்து மாலை அணிவித்து வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

தென் மாவட்ட மக்களின் குலசாமியாக மதிக்கப்படுகிறார் பென்னிகுவிக். முல்லைப்பெரியாறு அணைக்காக தன் உழைப்பையும், சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுவிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளை பொங்கல் வைத்து படைத்து வழிபடுகின்றனர். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மற்றும் தேனி உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை நினைவு கூறும் விதமாக தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி அவரது சிலைக்கு மற்றும் திருவுருவப்படத்திற்கு ஆங்காங்கே மாலை அணிவித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்த தினத்தன்று கலை நிகழ்ச்சிகள்,பொங்கல் வைத்து வழிபாடு உள்ளிட்டவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதராக செய்து காட்டினார். அதனால்தான் தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டி தனது நன்றியை திருப்பி செலுத்தியிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அவருக்காக ஒரு மணிமண்டபம் கட்டினார். இந்த மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் ஆகிய தினங்களில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் அவரது பிறந்த தினமான ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை முதலே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மணிமண்டபம் வருகை தந்து பொங்கல் வைத்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாலார்பட்டி கிராமத்தில் பென்னிகுவிக் பொங்கல் விழா ஜனவரி 14,15,16 மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது. தேனி மாவட்டம் பாலார்பட்டி பென்னிகுவிக் பொங்கல் விழா 24ஆண்டாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முல்லைபப்பெரியார் அணை கட்டியதன் நன்றிக்கடனாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் தேவராட்டம் ஆடி வந்தனர். பெண்கள் வீடு வீடாக பொங்கல் பானையை தலையை சுமந்து ஊர்வலமாக வந்தனர். பாலார்பட்டியில் பென்னி குக் நினைவு கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர். கலையரங்கம் மைதானத்தின் முன்பாக வரிசையாக பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழகத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. சூரியன் போல பென்னி குக் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பாலார்பட்டி ஊரில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பென்னி குவிக் என்றும் சாரா என்றும் பெயர் வைக்கின்றனர். குலசாமி பெயர் போல பென்னி குவிக் என்று வைக்கின்றனர். பாலார்பட்டியில் திருமணம் நடைபெறும் போது பென்னிகுவிக் படத்தை போட்டு அச்சிடுகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணைகட்டும் போது லோகன் துரை என்ற பொறியாளர் இறந்து விட்டார். அவரது நினைவாக லோகன்துரை பெயரையும் நிறைய பேர் வைத்திருக்கின்றனர். அவர் இல்லை என்றார் நாங்கள் இல்லை என்று கூறுகின்றனர். அணை கட்டும் போது இறந்து போன பொறியாளர்கள் 16 பேர், பெண் குழந்தை ஒருவர் அவர்களுக்கு கல்லறை கட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 426 பேர் கட்டுமானப்பணியின் போது உயிர் தியாகம் செய்துள்ளனர். விபத்தில் நிறைய பேரின் உறுப்புகள் சேதமடைந்தது. ஆண்டுதோறும் கபடிப்போட்டி, சேவல்சண்டை, ரேக்ளா ரேஸ் நடத்தப்படுகிறது. பென்னிகுக் பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. கோலப்போட்டி சிறப்பாக நடத்தப்படுகிறது. நெல்மணிகளால் கோலப்போட்டி நடத்தப்பட்டது. 50 பேருக்கு பென்னிகுவிக் முகமுடி வழங்கப்பட்டது. தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர்.