நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது நடிகர்கள் பதட்டப்படுவார்கள்: தமன்னா

நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது நடிகர்கள் பதட்டப்படுவார்கள் என்று நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல், அழகு பொம்மை போல வந்து செல்லும் கதாநாயகிகளுக்கு மத்தியில், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது போன்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் தமன்னா. பாகுபலி படத்தில் பிரபாஸூடன் போட்டி போட்டுக்கொண்டு சண்டை காட்சியில் மிரட்டி இருப்பார். இவர் கடைசியாக விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் சண்டை காட்சியில் மிரட்டி இருப்பார். அந்த படத்திற்கு பிறகு வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் துணிச்சலான பெண்ணாக நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. தற்போது இவர் போலா சங்கர் என்ற தெலுங்கு படத்திலும், போலே சூடியன் என்ற இந்தி படத்திலும், பாந்த்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தி படமான பாப்லி பவுன்சர் மற்றும் தெலுங்கு படமான குர்துண்டா சீதகாலம் ஆகியவற்றில் நடித்து இருந்தார். இப்படத்தில் நடித்தது குறித்து பேட்டி அளித்த தமன்னாவிடம், குர்துண்டா சீதகாலம் படத்தில் உள்ள குளியலறை காட்சி குறித்தும் அந்த படத்தில் உள்ள பல நெருக்கமான காட்சி குறித்தும் கேட்கப்பட்டது. நெருக்கமான காட்சி மற்றும் ஆண் நடிகர்களின் உணர்வுகள் குறித்து தமன்னா கூறுகையில், அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.