ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது நாளாக உண்மை கண்டறியும் சோதனை!

ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது நாளாக ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதி அளித்தார். அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள தடயவியல் துறை நிபுணர்கள் இந்த சோதனையை நடத்தினர்.

அதன்தொடர்ச்சியாக, கலைவாணன், செந்தில், திலீப் ஆகிய மூன்று பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் தவிர, சுரேந்தர் என்பவரும் இன்று ஆஜராகவுள்ளார். மேலும், நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட சத்யராஜ் என்பவரிடம் இன்று மீண்டும் சோதனை நடைபெறவுள்ளது.

உண்மை கண்டறியும் சோதனையானது நான்கு பேராக பிரித்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, நேற்று நடைபெற்ற சோதனை 8 மணி நேரமாக நடைபெற்றது. அப்போது, ரவுடிகளிடம் பல்வேறு கேள்விகளை நுபுணர்கள் கேட்டு குறித்து வைத்துக் கொண்டனர். போலீசார் தயாரித்துக் கொடுத்த கேள்விகள் உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்தப்பட்ட நபர்களிடம் கேட்கப்பட்டன. அவர்கள் அளிக்கும் பதிலில் உண்மை இருக்கிறதா இல்லை பொய் சொல்கிறார்களா என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்டவர்களின் இதய துடிப்பை பல்ஸ் மூலம் கண்காணிக்கும் நிபுணர்கள், அதை அறிக்கையாக போலீசாரிடம் தாக்கல் செய்யவுள்ளனர். உண்மை கண்டறியும் சோதனையில் 12 கேள்விகள் கேட்கப்பட்டதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று நடைபயிற்சி சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். கல்லணை செல்லும் சாலையில் பொன்னி டெல்டா பகுதியில் அவரது உடல் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகத்துக்குரிய தமிழகத்தின் முக்கியமான, அந்த சமயத்தில் திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலில் 13 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த 13 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, திருச்சி ஜே.எம்- 6 நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.