ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார்: சரத்குமார்

கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன.

இந்நிலையில் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி தலைவர் சரத்குமார் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “தலைமைக் கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும்” என கூறினார்.