எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்: பழ.நெடுமாறன்!

பாஜகவிற்கு எதிராக உருவாகும் எதிர் அணி மாற்று திட்டத்தை கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

நாகை மாவட்டம் நாகூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்ஜிகே.நிஜாமுதீன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழக ஆளுநர் செயல்பட கூடாது. தமிழக ஆளுநர் ரவி மீது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஆளுநராக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை போன்று செயல்படும் ஆளுநர்கள் மீது இந்திய குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கு போட்டியாக ஆளுநர்கள் தனி அரசாங்கத்தை நடத்த நினைத்து மாநில அரசுகளோடு போட்டி போடுவதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மாதக்கணக்கில் இழுத்தடித்து இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் தமிழக ஆளுநரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

பாஜகவிற்கு மாநில கட்சிகள், அகில இந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் பாஜக முன்மொழிந்துள்ள திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிய வேண்டும் ஆனால் எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பாஜகவை எதிர்க்க கூடிய மாற்றுத்திட்டதை உருவாக்க முன்வரவில்லை.

ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்துமதம் என்று சொல்லி வரும் பாஜக இந்தியாவை முழுவதுமாக இந்து நாடாக மாற்ற துடிக்கிறது. பாஜகவை எதிர்க்க, சிறபபான மாற்று திட்டத்தை எதிரணியினர் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.