‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும்: ஏ.ஆர்.ரகுமான்

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும் என நம்புவதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனுடன் மேலும் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும் என நம்புவதாக தெரிவித்தார். ஏ.ஆர்.ரகுமான் இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவிற்கு ரசிகர் ஒருவர் “ஆந்திர மக்கள் இன்னும் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஆனால், மக்களாகிய நாம் நமது எதிரியை நேசிக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ஏ.ஆர்.ரகுமான், “நாம் அனைவரும் ஒரே குடும்பம் நமக்குள் தவறான புரிதல்கள் இருக்கலாம்.. ஆனால் நாம் ஒருவருக்கொருவர் நிற்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.