ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை:காவல்துறை மறுப்பு!

ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை மறுத்துள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்தி டெல்லியில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, அவரது பாதுகாப்பில் சமரம் இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுல் காந்தி இசட் ப்ளஸ் பாதுகாப்பைப் பெற்றவர். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை டெல்லி போலீசார் வழங்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள்தான் ராகுல் காந்திக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அவரை பாதுகாத்தனர். டெல்லி போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்” என குற்றம் சாட்டியிருந்தது.

இந்தநிலையில் ஜம்மு – காஷ்மீரிலும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ரத்து செய்யப்பட்டது. அணிவகுப்பு காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் நுழைந்ததால், “மிகக் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள்” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. காஷ்மீரில் 20 கிலோ மீட்டர் நடக்க இருந்த ராகுல் காந்தி, சுமார் ஒரு கி.மீ.க்குப் பிறகு நிறுத்த வேண்டியதாயிற்று. ராகுல் காந்தியுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவும் உடன் இருந்தார்.

ராகுல் காந்தி ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் பனிஹால் சுரங்கப்பாதையைக் கடந்தபோது, ஒரு பெரிய, எதிர்பாராத கூட்டம் அவருக்காகக் காத்திருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். எதிர்பாராத பெரிய கூட்டம் இருந்த போது, பாதுகாப்பாளர்கள் திடீரென மாயமாகினர் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பெரிய கூட்டம் இருந்தபோது பாதுகாப்புப் பணியாளர்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்தநிலையில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. 15 மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF), 10 ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிறப்புப் படைகள் உட்பட முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே யாத்திரையில் அனுமதிக்கப்படுவர். ஆனால் பனிஹல் பகுதியில் இருந்த கூட்டத்தைப் பற்றி தெரிவிக்கப்படவில்லை. மேலும் யாத்திரை நிறுத்தப்படுவதற்கு முன்பு காவல்துறையினருடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.