வேட்டி, சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது: அமைச்சர் காந்தி

வேட்டி, சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துளளார்.

பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்காத தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல் பொங்கல் முடிந்து 10 நாட்கள் மேலாகியும் இலவச வேட்டி சேலைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று இரு நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் மிக சீரிய திட்டங்களில் ஒன்று.
இத்திட்டத்தினை பொங்கல் 2023க்கு செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் 09.09.2022 அன்று வழங்கியும் மற்றும் அதற்காக மொத்தம் ரூ. 487.92 கோடி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 177.64 லட்சம் சேலைகள் மற்றும் 177.23 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய வருவாய் துறையின் தேவைப்பட்டியல் பெறப்பட்டது. அதனடிப்படையில் கைத்தறி/ விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 27.01.2023 தேதியில் 137.66 லட்சம் சேலைகள் (77.5 %) மற்றும் 112.81 லட்சம் வேட்டிகள் (63.7%) துறையின் கீழ் செயல்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் 122.78 லட்சம் சேலைகள் (69.11%) மற்றும் 97.02 லட்சம் வேட்டிகள் (54.74%) பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வருவாய்த் துறை தேவைப்பட்டியலின்படி அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு முன்னரே 09.01.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சென்னை, மயிலாப்பூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சத்தியா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் விநியோகிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. எனவே, வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவலாகும். பொங்கல் 2013 பின்னர் நடப்பாண்டில் 10 மாறுப்பட்ட வண்ணங்களில் 15 விதமான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுடன் தரமான சேலைகளும் 5 மாறுபட்ட வண்ணங்களில் 1 அங்குல கரையுடன் கூடிய தரமான வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பொறுத்தவரை திட்டத்திற்கு தேவையான அனைத்து சேலைகள் மற்றும் வேட்டிகள் தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி/ விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நமது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கும் பணி துவக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில்தான் நிறைவு செய்யப்படுகிறது. அதைப்போலவே, நடப்பு 2023ம் ஆண்டிற்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் துவக்கப்பட்டு, இத்திட்டம் வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நிறைவுறும் என்பதே உண்மை. வேட்டி-சேலை விநியோக திட்டம் இவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.