காவல்துறையை இழிவாக பேசிய விசிக மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம்!

விசிக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காவல் நிலையம் எதிரில் ஜனவரி 27 ஆம் தேதி விசிக மாவட்டச் செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன் தலைமையில் அவரது அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர். காவல் துறையினருக்கு எதிராக பேரணியாக சென்று ஒருமையில் பேசிய வீடியோ வெளியானது. காவல்துறையினரை மிக மோசமாக இழிவாக பேசிய விவகாரம் சமூகவலைதளங்கள் மூலம் பரவ ,பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு திருவண்ணாமலை போலீசுக்கு மேலிடத்திலிருந்து வந்தது. காவல்துறையினரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியவர்களைக் கைது செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து விசிகவினர் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாஜக உள்ளிட்ட எதிட்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவனை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே. எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன. எனவே, இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் அவர்கள் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.