தேவை இல்லாமல் என்னை சீண்டக் கூடாது. நாங்க நாய்கள் அல்ல. தேனீக்கள் கூட்டம்: சீமான்

நான் பிரபாகரன் பிள்ளை. தேவை இல்லாமல் என்னை சீண்டக் கூடாது. நாங்க நாய்கள் அல்ல. தேனீக்கள் கூட்டம்.. ஒரு கல்லை எடுத்து எறிந்தால் நீதான் பிடிப்ப ஓட்டம் என்று சீமான் கூறியுள்ளார்.

கருணாநிதி நினைவு பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில், எங்களது எதிர்ப்பை மீறி நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன் என்றார் சீமான். இதற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்த கண்டனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னை, கடற்கரைப் பகுதியில் தலைவர் கலைஞரின் பேனாவிற்குச் சிலை வைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது. அதில் தன் கட்சியின் கருத்தை உரைக்க, நாம் தமிழர் கட்சியின் சீமான் வந்துள்ளார். அதில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், “நீ பேனா வைத்தால் நானே அதை உடைப்பேன்” என்று அவர் பொதுவெளியில் பேசியுள்ளது வெறும் கருத்தாகாது. அது வன்முறையின் வெளிப்பாடு. அது வெறும் கருத்துதான் என்றால், இன்னொருவர் “நீ பேனா சிலையை உடைத்தால், நான் உன் கையை வெட்டுவேன்” என்று சொல்லக்கூடும். அதுவும் வெறும் கருத்துதான் என்று விட்டு விடலாமா? உடனே, “பாருங்கள் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்பார் அண்ணாமலை. “அதனால் ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்பார் சு.சாமி. நமக்குத் தெரியும், இவர்கள் அனைவரும் ஒரே நாடகக் கோஷ்டியின் வெவ்வேறு பாத்திரங்கள்! பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலில்தான், சீமான் பேச்சில் இவ்வளவு திமிர் வெளிப்படுகிறது. திமிரை அடக்கியே தீர வேண்டும். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறியுள்ளதாவது:-

பிரபாகரன் பிள்ளைக்கு இது கூட இல்லை எனில் என்ன செய்வது? எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து அரசியலுக்கு வந்தவனா நான்? இது பரம்பரை திமிர்.. பிறவித் திமிர். அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்கிறான் என் தலைவன். பயம் என்பது கோழைகளின் தோழன்; வீரனுக்கு எதிரி. எதையாவது சும்மா பேசிகிட்டு இருப்பாங்க. கருணாநிதி இனத்துரோகி; ஜெயலலிதா இன எதிரி; ஜெயலலிதாவை மன்னிக்கலாம் என எனக்கு வகுப்பெடுத்தவர் சுப.வீ. தன்னலம் என்று வந்துவிட்டால் அறிவுவேலை செய்யாது என்கிறார் அம்பேத்கர். திமிரை அடக்க வேண்டிய நேரம் என்கிறார் சுப.வீரபாண்டியன். எங்க அண்ணன் (சுபவீ) அமைதியாக இருந்தால் மதிப்பேன். இப்படியே தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தால் மிதிப்பேன். அவ்வளவுதான் நான் செய்ய முடியும். அடிச்சிருவாங்க.. சிறையில் போட்டுறவாங்கன்னு பயப்படுறது இல்லை.. என்னை ஒன்னும் தூக்கில போடப்போறது இல்லையே.. தூக்கு கயிற்றுக்கு அஞ்சுறவன்னு என்னை நினைச்சுகிட்டு இருக்காது.. மலர்மாலைக்கு கழுத்தை நீட்டுவது போல தூக்கு கயிறுக்கு துணிந்து கழுத்தை நீட்டுகிறவனே வீரன்னு சொன்ன முத்துராமலிங்க தேவரின் பேரன்நான். சும்மா போட்டு என்னை பூச்சாண்டி பண்ணிகிட்டு இருக்கக் கூடாது.. அதை பொருட்படுத்துவது இல்லை.

இதுவரைக்கும் நான் அவரை பேசுனது இல்லை. தொட்டதும் இல்லை.. கடந்து வந்திருக்கிறேன். அப்படி எழுதவில்லை எனில் அவர் இருப்பை தக்க வைக்க முடியாது. என்னை எதிர்த்து பேசத்தான் இந்த வாடகை வாய்கள். இந்த அல்லக்கைகள் வைத்திருக்கிறார்கள். நம்ம மரியாதையாக நம்ம அண்ணன், நம்ம நேசிச்சுட்டோம், கூட இருந்துட்டோம், பண்பாட்டுடன் கடந்து போகனும் என நான் நினைப்பதை அவங்க காப்பாற்றனும்.. நாகரிகம், பண்பாடு எனக்கு மட்டும் இருக்கனும்னு நினைக்க கூடாது.. நீ 10 வருஷம் சிறையில் போடு.. வெளியே வரும் போது இதே திமிரோடுதான் வருவேன். ஏனெனில் நான் பிரபாகரன் பிள்ளை. தேவை இல்லாமல் என்னை சீண்டக் கூடாது. நாங்க நாய்கள் அல்ல. தேனீக்கள் கூட்டம்.. ஒரு கல்லை எடுத்து எறிந்தால் நீதான் பிடிப்ப ஓட்டம். இவ்வாறு சீமான் கூறினார்.