கூட்டணி கட்சிக்கு எங்க ஓட்டு இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்: திருமாவளவன்!

கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி என்றால் அது கசப்பதாகவும், ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் திருமாவளவன் பரபரப்பாக பேசினார்.

திருவாரூர் தெற்கு வீதியில் விசிக நிர்வாகி கவியரசன் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சம்மந்தப்பட்டு இருப்பதாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, கவியரசன் குடும்பத்திற்கு விசிக சார்பாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திருமாவளவன் வழங்கினார். பிறகு மேடையில் திருமாவளவன் பேசியதாவது:-

பாரதிய ஜனதா கட்சி ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை செய்து அதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறது. கிரிமினல்களை கட்சியில் சேர்ப்பதற்கு அச்சப்படாத கூச்சப்படாத கட்சி பாஜக. பாஜகவில் ஊடுருவியிலுள்ள கிரிமினல்களை திமுக அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியும்‌. திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தடுக்க முடியும்.

திமுக தலைமையில் வலுமையான கூட்டணி அமைய வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அந்த வகையில் கமலஹாசன் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு வரவேற்கிறோம். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை தனிமைப்படுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணை வேண்டும்.

இப்படியாக பேசிக்கொண்டிருந்த திருமாவளவன் ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி என்றால் அது கசப்பதாகவும், ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் கூறி பரபரப்பை பற்ற வைத்தார். பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தான் தங்கள் கட்சி கொடியை ஏற்றவிடுவதில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அவர் இதன் மூலம் திமுகவை மறைமுகமாக சாடினார். கிரிமினல்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முதலில் முதலமைச்சர் கைவிட வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாக பேசிய திருமாவளவன், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் ரவுடிகளை நம்பி அரசியல் செய்வார்கள் என பாஜகவை விமர்சித்தார். திருமாவளவனின் பேச்சு பாஜகவை நேரடியாகவும் திமுகவை மறைமுகமாகவும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக இன்று மதவாத சக்திகளின் பிடியில் சிக்கிக் கொண்டு மூன்று அணிகளாக பிரிந்து இருக்கிறது. பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் இந்த கட்சி ஒரே கட்சியாக இருந்திருக்கும். அதிமுகவை இரண்டாக பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி அதிமுக தலைமையிலான அணியே இந்த இடைத்தேர்தலில் காணாமல் போய்விட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எதிரிகளை இல்லை என்ற கருத்து தற்போது திமுக கூட்டணிக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவின் இந்த நிலைக்கு காரணம் பிஜேபியின் சதித்திட்டம் தான். இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதிமுகவுக்கு நல்லது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் தொடரும். திமுக கூட்டணி இன்னும் வலிமை பெறும். திமுக கூட்டணி தமிழகத்தில் 40க்கும் 40 வெற்றி பெறும். அதிமுகவை பலவீனபடுத்தி மத சக்தியாக இருக்கும் பாஜக இங்கு காலூன்ற நினைப்பது நல்லதல்ல. எனவே அதிமுக தன்னை வலுபடுத்திக் கொள்ளும் போது தான் பாஜகவை விரட்டி அடிக்க முடியும் என கூறினார்.