ஆந்திராவில் விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு: உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தாபுரம் மண்டலம் ஸ்ரீரங்கம்பட்டியில் அம்பட்டி சுப்பண்ணா என்பவருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் ஊழியர்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். 30 தொழிலாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்ட நிலையில், 7 தொழிலாளர்கள் ஆயில் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அச்சமயம் எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சம்பவ இடத்திலேயே 7 பேரும் உயிரிழந்தனர். படேரு பகுதியை சேர்ந்த 5 பேரும், புலிமேருவை சேர்ந்த 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததே தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணம் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயில் டேங்கை மொத்தம் 9 பேர் சுத்தம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் எண்ணெய் தொழிற்சாலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன. உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து தகவலறிந்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் டனெடி வனிதா அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் பற்றி போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.