ஆர்எஸ்எஸ் யார் மனதையும் புண்படுத்தாமல் பேரணி செல்ல வேண்டும்: உயர்நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் வகையில் முழக்கமிடக்கூடாது என ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு காவல்துறையினர் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களி்ல் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க மறுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அணிவகுப்பு பேரணியை ரத்து செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் 45 மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என வாதிடப்பட்டது. ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்.எஸ்.எஸ். அறிவித்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என தமிழக அரசிற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கடுமையான ஒழுங்குடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் முழக்கமிடாமல் பேரணி நடத்த வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.