ஏழைகள், பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

நாட்டின் கொள்கைகளில் பாகுபாடு கிடையாது. ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதி, 1824-ம் ஆண்டு பிறந்தார். ஆரிய சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் எதிர்த்து போராடினார். பெண்கள் அதிகாரம் பெற குரல் கொடுத்தார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்ட தொடக்க விழா நேற்று டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு, பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவுக்கான ‘லோகோ’வையும் வெளியிட்டார். மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி, கலாசாரத்துறை இணை மந்திரிகள் மீனாட்சி லேகி, அர்ஜுன்ராம் மேக்வால் ஆகியோரும் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சுற்றுச்சூழலில் உலகத்துக்கே இந்தியா வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது மிகவும் பெருமையான விஷயம். பாரம்பரியம், வளர்ச்சி என்ற இரட்டை தண்டவாளத்தில் நாடு ஓடிக் கொண்டிருக்கிறது. அளப்பரிய சுயமரியாதையுடன் பாரம்பரியம் மீது இந்தியா பெருமை கொள்கிறது. நவீனத்துவத்தை பின்பற்றிக்கொண்டே பாரம்பரியத்தை வலுப்படுத்துவோம் என்று தன்னம்பிக்கையுடன் சொல்லிக் கொள்கிறது. நாட்டின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளில் எந்த பாகுபாடும் கிடையாது. ஏழைகள், பின்தங்கியவர்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு சேவை செய்வதற்கு நாடு முன்னுரிமை அளிக்கிறது.

நான் கடமைப்பாதையில் நடப்பதை பற்றி பேசும்போது, சிலர் இவர் கடமை பற்றி மட்டுமே பேசுகிறார், உரிமை பற்றி பேசுவது இல்லை என்று கூறுகிறார்கள். 21-ம் நூற்றாண்டில் எனக்கு இந்த நிலைமை என்றால், 150 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்துக்கு பாதை காட்டியபோது தயானந்த சரஸ்வதி எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் காட்டிய பாதை, கோடிக்கணக்கான மக்களிடையே நம்பிக்கைைய விதைத்தது. பெண்கள் அதிகாரம் பெற அவர் குரல் கொடுத்தார். அதனால் இன்று நமது மகள்கள் சியாச்சின் பனிமலையில் பணியாற்றுவதில் இருந்து ரபேல் போர் விமானங்களை இயக்குவதுவரை பெரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.