துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆயிரம்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி நிலநடுக்கத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தவிர அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், மருந்துகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் ஏராளமான நிவாரண பொருட்களுடன் 7-வது இந்திய விமானப்படை விமானம் நேற்று இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சோலார் விளக்குகள், அவசர கால மருந்துகள் உள்பட 35 டன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 23 டன் பொருட்கள் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கும், 12 டன் பொருட்கள் துருக்கிக்கும் வழங்கப்பட்டன. இந்தியா அனுப்பிய பொருட்களை டமாஸ்கசில், அந்த நாட்டு உள்ளாட்சி மற்றும் சுற்றுச்சூழல் துணை மந்திரி மவுதாஸ் டவாஜி பெற்றுக்கொண்டார். இந்த தகவலை மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.