பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை: மாணிக்கம் தாகூர்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் மகாத்மா காந்தி நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-

ரயில்வே திட்டங்களில் சிவகாசி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 73 ரயில் நிலையங்களை மேம்படுத்த அறிவித்துள்ள மத்திய அரசு சிவகாசி ரயில் நிலையத்தை இத்திட்டத்தில் சேர்க்காதது கண்டிக்கத்தக்கது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சிவகாசி, அருப்புக்கோட்டை, திருத்தங்கல் ரயில் நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தி கடிதம் எழுத உள்ளேன்.

சிவகாசி மாநகராட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் சிவகாசி மாநகராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன். துரை வைகோ போட்டியிட்டால் வரவேற்பேன். ராகுல் காந்தியை பிரதமராக்க 40 தொகுதியிலும் வெற்றி பெற அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லி இருப்பது சதி வேலையாக உள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வில் முக்கிய மாற்றம் வர துவங்கியுள்ள நேரத்தில் இதுபோன்ற விஷயங்களை பேசி மக்களின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்கள் வாழ்வை திசை திருப்புவதாக உள்ளது. பழ.நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் குழப்பங்களை விளைவித்து இலங்கையில் வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையை மீண்டும் குண்டும் குழியுமாக மாற்றிவிட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.